Tuesday 2 October 2012

இன்னமும் இருக்கின்றன 'பறப்'பருந்துகள்


இன்னமும் இருக்கின்றன 'பறப்'பருந்துகள்

கோயம்புத்தூர் வ.உ.சி. உயிரியல் பூங்காவிலிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் கூண்டுகளுக்கு முன்பு பெயர் பலகை இருக்கும், அதில் விலங்கு அல்லது பறவையின் பெயர் மற்றும் அது குறித்த தகவல்கள் இருக்கும். அங்கிருக்கும் ஒரு வகைப் பருந்திற்கு பரப்பருந்து (Pariah Kite) என்று பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது (பார்க்க புகைப்படம்). கழுத்தில் வெள்ளை இருக்கும் பருந்திற்கு 'பருந்து' என்றும் முழுவதும் கருப்பாக இருக்கும் பருந்திற்கு பரப்பருந்து என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பரப்பருந்து என்பது 'பறை' என்பதிலிருந்து வந்ததே, அதாவது 'பறப்பருந்து'. வெள்ளைப் பருந்தை (Brahman Kite)கிருஷ்ணப்பருந்தென்று கண்ணத்தில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் பறப்பருந்தென்று பெயர் வைத்து இழிவு படுத்துவதை நூறு வருடங்களுக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் கண்டித்துள்ளார். அதாவது ஆங்கிலத்தில் வந்த செய்தியை English Standard (12 மே 1909) பத்திரிக்கை எவ்வாறு வெளியிட்டது சுதேசமித்திரன் எவ்வாறு மொழி பெயர்த்தது என்பதை விளக்கும் போது "வைஸ்ராயும், லேடி மிண்டோவும் தங்களது சிறிய நாயுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் வேறொரு நாய் ஓடி வந்து கடித்துவிட்டதாம்." இந்த செய்தியை சுதேசமித்திரன் வெளியிடும் போது "ராஜபிரதிநிதி லார்ட் மிண்டோவும், லேடி மிண்டோவும் தாங்கள் வெகு அருமையாய் வளர்க்கும் ஒரு நாயுடன் சிம்லாவில் வெளியே உலாத்தப்போயிருந்த போது பறைநாய் ஒன்று அவர்களுடைய நாயைத் தாக்கி கடித்ததாம்." அதாவது strange dog எனும் வார்த்தையை பறைநாய் என்று பயன்படுத்திய சுதேசமித்திரனை அயோத்திதாசர் கண்டித்து நூறு வருடங்களுக்கு மேலாகிறது ஆனாலும் பறை எனும் சொல் மீதான வன்மமும் வெறுப்பும் துளி கூட குறையவில்லை. இது போன்ற வார்த்தைகள் சாதி வன்மம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு அது காலனிய காலத்தில் அகராதிகளிலும் பதிவாகியது. இன்றும் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் Pariah எனும் சொல்லுக்கு a person who is not acceptable to society and is avoided by everyone (சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத அனைவராலும் புறக்கணிக்கப் படக்கூடியவன்) என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தத்தை அகராதி உருவாக்கிய வெள்ளைக்காரன் எவனோ ஒருவன் தரவில்லை இந்த பாசமிகு தமிழ் சமூகமே தந்தது. அதை இன்னமும் பத்திரமாக உயிரியல் பூங்காக்களில் பாதுகாக்கிறது.

பறையெனென்ற சொல் மீதுள்ள பகை குறித்து அயோத்திதாசர் கூறும் போது, "பவுத்த தன்மத்திற்கும், பவுத்தர்களாம் மேன் மக்களுக்கு சத்துருவாக தோன்றிய வேஷ பிராமணர்கள் [பிராமணர்கள்] பவுத்தர்களை தாழ்த்தி பறையெனென்று பரப்பினர்" என்கிறார். இதை சமூகத்தில் நிலை நிறுத்தும் விதமாக பறைப்பருந்து x பார்பாரப்பருந்து, பறைமைனா x பார்பாரமைனா,  பறைப்பாம்பு x பார்பாரப்பாம்பு என்று பெயர் வைத்தனர். ஆனல் பறைநாய் என்று பெயர் வைத்தவர்கள் அதற்கு எதிர் சொல்லான பாப்பாரநாய் என்பது இழிவு படுத்தும் என்பதால் பறைநாயென்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்கிறார். அம்பேத்கர் இந்திய வரலாற்றை இந்து மதத்திற்கும் பவுத்தத்திற்குமான போராகவே பார்க்கிறார். இந்த போரில் வீழ்த்தப்பட்டவர்களே தீண்டப்படாதவர்கள் என்கிறார். வருடங்கள் பல ஓடி விட்டன 'சமூகப் புரட்சிகள்' பல நடந்ததாக மார்தட்டிக் கொள்கிறோம், இடையிலிருந்த சாதிகள் முன்னுக்கு ஓடி விட்டன, முன்னால் இருந்த சாதிகள் வெளி நாடுகளுக்கு சென்று விட்டன, இந்த திராவிட அல்லது தமிழ் திருநாட்டில் 'பாப்பாரப்பருந்துகள்' பறந்து போய் விட்டாலும் 'பறப்பருந்துகள்' மட்டும் இன்னமும் இருக்கின்றன. (நண்பர்கள் வேண்டுமானால் இணையத்தில் Pariah Kite அல்லது Brahman Kite என்று தேடிப்பாருங்கள் என்ன படம் வருகிறது என்று பாருங்கள்).

Saturday 10 March 2012

மாற்று ஊடகம் விடுதலைக்கான ஊடகமாக மாற வேண்டும்

மாற்று ஊடகம் விடுதலைக்கான ஊடகமாக மாற வேண்டும்

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மால்கம் ஆதிசேசையா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்வாக, மூன்று நாட்கள் (சனவரி 25–27) தலித் ஆவணப்பட விழா மற்றும் ஓவியக் கண்காட்சி, சென்னை அடையாறில் நடைபெற்றது. இவ்விழாவில்தலித் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, அதன் மீதான விவாதமும் நிகழ்த்தப்பட்டன. திரையிடப்பட்ட ஆவணப்படங்களின் இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று விவாதித்தனர். இது, கடந்த பத்து ஆண்டுகளாக காட்சி ஊடகங்கள் மூலம் தலித் விடுதலைக்கான செயல்பாடுகள் குறித்த மதிப்பாய்வாக அமைந்தது.

இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற தியடோர் பாஸ்கரன், ஆவணப்பட வரலாற்றைப் பார்த்தால், முதலில் அது அரசு ஆட்சி குறித்த பரப்புரைக்காகவே பயன்படுத்தப்பட்டது. பின்னாட்களில் இந்த வடிவம் தனி நபர்களின் கைகளில் வந்தபோது அரசியல், பண்பாடு குறித்த ஆவணப்படங்களாக வெளிப்பட்டன. தலித் அரசியல் எழுச்சிக்குப் பிறகõன காலங்களில் சமூக செயல்பாட்டாளர்கள், ஆவணப்படம் என்ற வடிவத்தின் மூலம் சமூக அவலங்களை, சாதியின் கொடுமைகளை, தீண்டாமையின் உக்கிரங்களை ஆவணப் படுத்தினர்.

இன்றைய சூழலில் இது போன்ற ஆவணப்படங்களை ஒரு மாற்று காட்சி ஊடகமாகவும் நாம் பார்க்க முடிகிறது. எந்த ஓர் ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும்போது, அது கவனப்படுத்தாத விசயங்களை முன்னெடுக்க, மாற்று ஊடகம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் இந்த ஆவணப்படங்கள் காட்சி ஊடக வெளியில் ஒரு மாற்றாக செயல்படுகின்றன என்றார்.

பேராசிரியர் மாதவ் பிரசாத்,திரைப்படத்திற்கான இயக்கத்திற்கும், இயக்கங்களுக்கான திரைப்படம் என்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாவது, திரைப்படத்தை மய்யப்படுத்துகிறது. இரண்டாவது, இயக்கச் செயல்பாட்டை முன்னிறுத்துகிறது. தலித் ஆவணப் படம் என்பதற்கான வரையறை தலித்துகளின் பிரச்சனைகளை படம்பிடிப்பது என்பதைக் கடந்து, வியாபார ஊடகங்கள் செய்யத் தவறியதை, கவனப்படுத்தாததை செய்யும் ஒரு ஊடகமாகத் திகழ வேண்டும் என்றார்.

ஆவணப்பட விழாவில் அறிமுக உரை நிகழ்த்திய முனைவர் லட்சுமணன், தமிழகச் சூழலில் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான தொடர்பு, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. திரைப்பட அரசியல், ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதும் திரைப்பட நடிகர்கள் அரசியல் பதவிகளை அடைந்ததும், திரைப்படம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்த்துகிறது. ஆனால் அதே திரைப்படம், சமூக அக்கறை கொண்டவர்களின் கைகளுக்கு வரும்போது, அது விடுதலைக்கான ஊடகமாக மாறுகிறது.

அந்த வகையில் ஆவணப் படங்கள்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஊடகமாக செயல்பட்டு வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் ஆக்கத் திறன்களை அங்கீகரிப்பதும் சமூக நீதியே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் படைப்பையே ஒரு போராட்ட கருவியாக்குகிறார்கள்.இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு படைப்பை படைப்பாளனின் சமூகப் பின்புலத்தைக் கொண்டு பார்க்காமல், அவனுடைய திறமையைக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம் என்றார்.

மாதிகா சமூகத்தினரின் வாழ்க்கையை விவரிக்கும் "மஹாதிகா' என்ற ஆவணப்படத்துடன் விழா தொடங்கியது. இந்தப்படத்தை சுரேஷ் மற்றும் சிந்து ஆகியோர் இயக்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரால் இழிவு என்று பழிக்கப்படும் பறையிசையின் முக்கியத்துவத்தை இப்படம் விளக்குகிறது. மாதிகா சமூகத்தினரிடம் இருக்கும் இசையறிவு, பறை செய்யும் முறை, ஓலைச்சுவடிகள் மூலம் தங்கள் சமூகத்தின் வரலாற்றைப் பாடும் முறை போன்ற தகவல்களின் மூலம் பிறர் கூறும் இழிவை அடித்து நொறுக்குகிறது.

"தலித் மீடியா நெட்வொர்க்' தயாரித்து ஆர். ஆர். சீனிவாசன் இயக்கிய "தீண்டத்தகாத நாடு' என்ற படம், தமிழகத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைகளான கீழ்வெண்மணி, உஞ்சனை, தாமிரபரணி படுகொலை, மேலவளவு படுகொலை போன்ற சம்பவங்களைத் தொகுத்து, சாதி என்பது உலக அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் என்பதை உணர்த்தியுள்ளது. மேலும் கோபால் மேனன் இயக்கிய Of Inhuman Bondage(2005), மற்றும் Resillient Rhythms (2006) கே.பி. சசி இயக்கிய Note from a crematorium,, ஜாஸ்மின் ராய் இயக்கிய Scavenging Dreams, ஆர். ஆர். சீனிவாசன் இயக்கிய "ஒரு நதியின் மரணம்', சிறீபாலா கே. மேனன் இயக்கிய "பந்தி போஜனம்', மூன்று பெண் கவிஞர்கள் குறித்து எடுக்கப்பட்ட அஞ்சலி மாண்டேரோ, கே. பி. ஜெய்சங்கர் இயக்கிய she write, கேரள மாநிலத்தின் செங்காரா பகுதியில் நிலத்துக்கான தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும் To Die for land : the Ulitimate Sacriflce என்ற ஆவணப் படம் போன்றவை திரையிடப்பட்டன.

ஆந்திராவில் மாதிகா சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையான உள் ஒதுக்கீட்டுக்கான போராட்ட வரலாற்றை விளக்கும் "தண்டோரா' எனும் ஆவணப்படம் குறித்த விவாதத்தில் பேசிய ஆதவன் தீட்சண்யா, தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இந்தப் படம் குறித்து விவாதிக்க நாம் தயங்குகிறோமோ என்று தோன்றுகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்த விவாதம் எழுந்தபோதுதலித் சமூகத்தின் பிற சாதிகளான பறையர், பள்ளர் மத்தியிலிருந்து உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துப் போராட்டம் பெரிய அளவில் எழவில்லை.

இதைப் பார்க்கும் போது ஆந்திராவைப் போலன்றி தமிழகத்தின் பிற தலித் சாதிகள் ஜனநாயகத்தன்மையுடன் நடந்து கொண்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒரு சிலர் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் போது தகுதி, தலித் ஒற்றுமை, தெலுங்கு பேசுபவர்கள் என்ற சொல்லாடல்கள் மூலம் முட்டுக்கட்டை போட முனைந்ததையும் நினைவு கூர்ந்தார்.

சாந்தா இயக்கிய "மேலவளவு' ஆவணப்படம் குறித்துப் பேசிய மா. வேலுச்சாமி, இந்தப் படம் சோகங்களையும், துக்கங்களையும் மட்டுமே பிரதானப்படுத்துவதாக உள்ளது. அதைத்தாண்டி தனது உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த முருகேசனின் வீரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார். "கல் மனிதர்கள்' எனும் ஆவணப்படம், திண்டுக்கல் பகுதியில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமை நிலை, வேலையில் இருக்கும் ஆபத்துகள், பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர்களின் கல்வி போன்ற பன்முகப் பார்வை கொண்டதாக இருந்தது. கோபால் மேனன் இயக்கிய Resillient Rhythms என்ற ஒரு மணி நேர ஆவணப்படம், இந்திய அளவிலான தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பீகாரில் பூமிஹார் எனும் நிலவுடைமை ஆதிக்கச் சாதியினரின் ஆயுதப் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்தப் படம்.

இவ்விழாவின் முடிவில் சதானந்மேனன், ஆ. ரா. வேங்கடாசலபதி மற்றும்ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந்த மூன்று நாள் தலித் ஆவணப்பட விழா குறித்து சதானந்மேனன் பேசுகையில், காட்சி ஊடகம் பரவலாகி வரும் இந்தச் சூழலில் ஆவணப்படங்கள் அதிகமாக வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், பாலியல் வன்கொடுமை, படுகொலை, நிலமின்மை, அழுகை, சோகம், வறுமை போன்ற விசயங்களோடு நின்று விடுவதால், தலித்துகளின் பண்பாட்டு விசயங்களை நோக்கி ஆவணப்படங்கள் நகருவதில்லை என்றார்.ஒருவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் பிறர் அவனை அடையாளப்படுத்துவதற்கும் பெரியளவில் வேறுபாடு உள்ளது என்றார். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆறு ஆவணப்பட விழாக்கள் நடைபெற்றுள்ளன. இது போன்ற விழாக்கள் ஆவணப்படத்திற்கான முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி செய்வனவாக அமைகின்றன.


இது போன்ற தலித் ஆவணப்படங்கள் தலித்துகளை படம் பிடிப்பதைவிட, ஒடுக்குபவர்களை, ஆதிக்கச் சாதியினரை படம் பிடிக்க வேண்டும். ஆதிக்கச் சாதியினரின் சாதிய மனதை விவரிக்கும் இதுபோன்ற படங்களின் பார்வையாளர்கள் தலித்துகளாக இருப்பதைவிட, ஆதிக்கச் சாதியினராக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார்.

ஆனந்த் டெல்டும்டே தமது உரையில், இது போன்ற ஆவணப்படங்களை சமூக செயல்பாட்டின் ஒரு நீட்சியாகவே நான் பார்க்கிறேன். ஓர் ஆவணப்படம் எடுப்பதற்கு முன்பு அந்தப்படம் எதைப்பற்றியது, அதை எவ்வாறு மக்களுக்கு கொண்டு செல்லப் போகிறோம் என்பன போன்ற கேள்விகள் முக்கியமானவை. சமூக எதார்த்தம் என்பது புரிந்து கொள்பவர்களில் வேறுபடுகிறது. என்ன பார்வையில் ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம், யாருடைய பார்வையில் பார்க்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்பட விழாவிற்கு Imagine Dalit Reality : Politics of Visual Representation என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலித்துகளின் எதார்த்தத்தை காட்சிப்படுத்துதல் என்பதுதான் முன்பாதியின் பொருள். கற்பனை என்று ஒன்று இருந்தால்தான் காட்சிப்படுத்துதல் என்ற ஒன்றும் இருக்கும். தலித்துகளின் எதார்த்தம் என்னவாக இருக்கும் என்ற கற்பனை அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை ஏன் தலித் கலை விழா, தலித் இலக்கியம் என்று எதற்கெடுத்தாலும் தலித் என்ற முன்னொட்டை சேர்க்கிறீர்கள் என்று மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் வினவினார். அப்போது தலித் பேந்தர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான மஹாதேவின் மராட்டிய இலக்கியத்தை கொடுத்து வாசிக்கச் சொன்னபோது, முதல் பாதியை படித்துவிட்டு எதுவுமே புரியவில்லையே என்றார். அது தான் தலித் இலக்கியம். இதற்கென்று தனி அடையாளம் உண்டு. ஆகவேதான் தலித் என்ற முன்னொட்டை சேர்த்திருக்கிறோம் என்றோம்.

இந்திய சமூகத்தில் ஒருவன் எந்த அளவிற்கு அறிவாளியாக இருந்தாலும், அவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தால், அவனது அறிவு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அங்கீகாரம் என்பது சமூகப் பின்புலத்தைக் கொண்டே வழங்கப்படுகிறது. தலித்துகளில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளைப் பயன்படுத்தி முன்னுக்கு வரும் சிறு எண்ணிக்கையிலான தலித்துகள், தங்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாகவே நிற்கிறார்கள். அப்படியானால் மீதமிருக்கும் பெரும்பான்மையான தலித்துகளின் நிலைமை என்ன என்ற கேள்வியை முன்வைத்தார். 

தலித் முரசு ஜனவரி10 2010

-ஜெ. பாலசுப்பிரமணியம்

Saturday 11 February 2012

இந்திய ஊடகங்களில் தலித்துகள்

இந்திய ஊடகங்களில் தலித்துகள்
இந்த கட்டுரையின் அடிப்படை நான் வேலைத் தேடும் சொந்த அனுபவத்தில் தொடங்குகிறது. நான் தகவல் தொடர்பியலில் முதுகலை படிப்பு முடித்துவிட்டு, சென்னை வந்தேன், தமிழ் ஊடக நிருபராவதற்கு; ஒரு தமிழ் தினசரி நிருபர் பதவிக்கு நேர்முகத்தேர்விற்காக  அழைத்தனர். நேர்முகத்தேர்வின் முதல் கட்டமாக, என்னைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதச் சொன்னார்கள். எழுதி செய்தி ஆசிரியரிடம் கொடுத்தேன். அதற்குப் பின் ஒரு நேர்காணல். சிறிது பயத்துடன், ஊடகங்களின் நெறிமுறைகள், இந்தியாவின் முதல் செய்த்தித்தாள், அன்றைய தலைப்பு செய்திகள், இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து கொண்டிருந்தேன். நேர்காணலின் போது, செய்தி ஆசிரியர் முதல் கேள்வியை ஒரு புன்னகையுடன், தமிழில் கேட்டார்,

 “பாலசுப்ரமணியம், உங்களோட சொந்த ஊர்?

திருநெல்வேலி, சர்.
ஆசிரியர்: திருநெல்வேலில பிள்ளைமார்தான் அதிகம் இல்லையா?
நான்: ஆமாம், டவுனில்  நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆசிரியர்: நீ பிள்ளைமாரா?
நான்: இல்ல, சர்.
ஆசிரியர்: அப்புறம்?
நான்: எஸ்.சீ
ஆசிரியர்: ஓஹோ …(மௌனம்)
ஆசிரியர்: சரி, ஆள் தேவைப்படும் போது சொல்கிறோம்.
நான்: நன்றி சர்.”
அந்த அலுவலகத்தில்  இருந்து அதற்குப்பின் எந்த அழைப்பும் வரவில்லை
இந்திய ஊடங்களில் தலித்துகள் 
தி வாஷிங்டன் போஸ்ட் செய்திதாளின் இந்திய செய்தியாளராக பணியாற்றிய கென்னெத் ஜே கூபர் எனும் ஆப்பிரிக்க அமெரிக்கர் 1996 -ல் எழுதிய தனது கட்டுரையில் "இந்தியாவில் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் செய்திதாள்களில் மிகமிகக்  குறைவாகவே உள்ளனர்" என்று குறிப்பிட்டார். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக தில்லியில் உள்ள பத்திரிக்கையாளர் பி என் உனியால் தனது கட்டுரையில் "கடந்த முப்பது வருடமாக நான் செய்தியாளராக பணியாற்றுகிறேன் ஆனால் இதுவரை ஒரு தலித் பத்திரிக்கையாளரை கூட நான் சந்தித்ததில்லை " என்று எழுதினார். இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு 1998 -ல் தலித் நிறுவனம் ஒன்று “End Apartheid in Indian media – Democratise Nation’s Opinion” எனும் தலைப்பில் கோரிக்கை மனு ஒன்றை இந்திய பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு அளித்தது, அதில் 2005 - ம் ஆண்டுக்குள் தலித் மக்கள் தொகை சதவீதத்திற்கு நிகராக இந்திய பத்திரிக்கைகளிலும் தலித்துகள் இடம்பெறுவதை உறுதி செய்ய  தேசிய ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் (ராபின் ஜெப்ரி 2001).

ராபின்  ஜெப்ரியின் கட்டுரையில் 'இந்திய ஊடகங்களில் தலித் செய்தி ஆசிரியரோ தலித்துகள் நடத்தும் செய்தித்தாள்களோ இல்லை, குறிப்பாக இந்திய பத்திரிகைத் துறையில் தலித் செய்தியாளர்களோ துணை ஆசிரியர்களோ இல்லை என்பதே உண்மை" என்கிறார். சித்தார்த் வரதராஜன் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் "தொலைக்காட்சிகளில் இடஒதுக்கீடு தொடர்ப்பான செய்திகள் ஒருதலைபட்சமாக வருவதற்கு ஊடகங்களில் தலித்துகள் இல்லாததே காரணம்" என்றும் அதற்குத்  தீர்வாக "செய்தி ஊடக நிறுவங்களில் சமவாய்ப்பு வழங்குவதற்கு இதுவரை ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரை (தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்) உட்கொணர்வு மூலமே இதற்கு தீர்வு காண முடியும்" என்கிறார். 2006 - ம் ஆண்டில் சி.எஸ்.டி.எஸ் ஆராய்ச்சி நிறுவனம் தில்லியில் இந்தி மற்றும் ஆங்கில ஊடக நிறுவனங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நடத்திய ஆய்வில் அச்சு ஊடகங்களில் 90 சதவீதம் பேரும் தொலைக்காட்சி ஊடகங்களில் 70 சதவீதம் பேரும் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினர் என்பது தெரிய வருகிறது.


ஊடக நிறுவனங்களில் தலித்துகள் குறைவாக இருப்பதற்கு ஊடக நிறுவனங்களின் சமுக விலக்குதலே காரணம் என்று முடிவாக கூறமுடியாது, ஏனென்றால் ஊடக (தனியார்) நிறுவனங்களில் ஆட்கள் தேர்தெடுக்கும் முறை மிகவும் ரகசியமாக பின்பற்றப்படுகிறது.  ஊடக நிறுவனங்களில் செய்தியாளர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வெளிப்படையாக இல்லாமல் இருப்பதால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வருவது சிக்கலாகிறது. ஆனால் ஏற்கனவே வேலை பார்க்கும் செய்தியாளர்களின் பரிந்துரை மற்றும் நிர்வாகத்திற்கு தெரிந்தவர்களின் பரிந்துரையின் பேரிலேயே வேலை நியமனம் நடைபெறுகிறது. இந்திய சமூகத்தில் மனித உறவுகள் என்பது சாதி சார்ந்தே புழங்குவதால் இது போன்ற பரிந்துரைகள் யார் யாருக்கு செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆக இந்திய ஊடகங்களில் தலித்துகள் இல்லாமல் போனதற்கு ஊடக நிறுவனங்கள் பணியாளர் பண்மைத்தன்மையில் கவனம் செலுத்தாததே காரணமாகும். இதன் விளைவு (பணியாளர் குறைவு அல்லது இல்லாமல் போவது) அந்த ஊடகங்களின் உள்ளடக்கங்களிலும் வெளிப்படுகிறது.

வெகுசன ஊடகங்களின் இடமளிப்பு 

வெகுசன ஊடகங்களில் தலித்துகள் குறித்த செய்திகள் முந்தைய காலங்களை விட கடந்த இரண்டு பதிற்றாண்டுகளாக அதிகம் இடம்பெறுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அம்பேத்கர் நூற்றாண்டான 1990 களுக்குப் பின்பு பல்வேறு மாநிலங்களில் தலித் இயக்கங்கள் ஊடக கவனம் பெற்றன.  மேலும் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் வருகையாலும் தலித் மக்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் ஊடக கவனம் பெற்றன. தமிழகத்தில் தமிழ் செய்திதாள்கள் மற்றும் இதழ்களை விட ஆங்கில ஊடகங்கள் (அவுட் லுக், பிரன்ட் லைன், தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) தலித்துகள் குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தன. இதனால், ஆங்கில ஊடகங்கள் தலித்துகளை அதிகமாக நியமனம் செய்திருக்கின்றன என்று அர்த்தம் இல்லை. ஆங்கில ஊடகங்கள் அகில இந்திய அளவில் செயல்படுவதால் அவை தங்களை முற்போக்கு முகங்களாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, அதே வேளை ஆங்கில ஊடகங்கள் சாதி அமைப்பு மற்றும் தலித்துகளுக்கான அரசு திட்டங்களில் உள்ள குறைகளை கேள்விக்குட்படுத்தாமல் தலித்துகள் மீதான வன்முறைகளை மட்டுமே (சோம்ஸ்கி சொல்வது போல Road Crime ) சித்தரிப்பதிலேயே கவனமாக உள்ளன. ஆனால் மொழி பத்திரிக்கைகளுக்கு இது போன்ற எந்த கட்டாயமும் இல்லை, ஏனென்றால் இந்திய மொழி பத்திரிக்கைகளின் செயல்பாட்டு வெளி மொழி மாநிலம் எனும் கிராமத்திற்குள்ளேயே  இருக்கிறது, அது எப்போதுமே சாதி அமைப்பிற்குள்ளேயே செயல்படுகிறது.தலித் சார்ந்த செய்திகளுக்கு ஆங்கில ஊடகங்கள் இடமளித்து தலித் இயக்கங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அனால் இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியது தலித்துகள் குறித்த செய்திகளுக்கு இடமளிக்கப்படுகிறதா இல்லையா என்பது மட்டுமல்ல, இடமளிக்கப்படும் செய்திகளில் தலித்துகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியம். 

இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் பல ஊடக கவனம் பெற்றன. உதாரணமாக 1968 - ல் கீழவெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொழுத்தப்பட்டனர். இந்தச் செய்தியை தினமணி நாளிதழ் 'கிசான்களுக்கிடையிலான மோதல்' என்றே தலைப்பிட்டது. அப்போது இந்த சம்பவம் அனைத்து ஊடகங்களாலும் ஒரு வர்க்கப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்டது (அதற்கு இடது சாரி இயக்கங்கள் ஒரு காரணம்). ஆனால் பல வருடங்களுக்குப் பின்பு தலித் இயக்கங்கள் எழுச்சிப்பெற்ற காலகட்டங்களில் கீழவெண்மணி சம்பவத்தை சாதிய படுகொலையாக மறுவரையறை செய்தன. ஆனால் அப்போது இந்த சம்பவத்தை ஊடகங்கள் ஒரு தீண்டாமையின் வெளிப்பாடாக சாதிய வன்மமாக பர்கத்தவறின. தலித் இயக்கங்கள் எழுச்சிப்பெற்ற 1990 களுக்குப் பின்பும் கூட தலித் இயக்கங்களின் போராட்டங்களை ஊடகங்கள் வன்முறையாளர்களின் கூட்டங்கள் எனவும், ஆகவே அவர்களை தாக்குவது காவல்துறையின் தார்மீக கடமை என்றும் 'செய்திகளை' பதிவு செய்தன(தாமிரபரணி, கொடியங்குளம் ஆகிய சம்பவங்களில் இதுவே நடந்தது). ஹுகோ  கோரின்ஜ் கூறுவது போல "தாமிரபரணி சம்பவத்தில் காவல்துறையால் கொல்லப்பட்டவர்களை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி செத்ததாகவே பொது மக்களை நம்மவைக்க முயற்சு செய்தன". மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஊரின் பொது இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துன்புறுத்தி கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து எட்டு நாட்களுக்குப்பிறகே DNA நாளிதழில் செய்தி வெளியாகியது. சில இந்தி நாளிதழ்கள் காவல்துறையின் பொய்யையே தங்களின் 'உண்மை செய்தியாக' வெளியிட்டன. இந்த கொலைகளை ஆதிக்கச் சாதியினரின் 'ஒழுங்கு நடவடிக்கை' என்றே நாளிதழ்கள் வெளியிட்டன. ஆனந்த் டெல்டும்ப்டே கூறுவது போல "இது போன்ற செய்திகள் சாதியின் கொடூரத்தை மறைப்பதோடல்லாமல் செய்தி வாசிப்பவர்களை தலித்துகள் மீது பரிதாபப்படாமலும் பார்த்துக்கொள்கிறது."

செய்தியறைகளில் தலித்துகள்

செய்தியறை எனும் கருத்தாக்கம் ஊடக நிறுவனகளின் செய்தி உற்பத்தியாகும் அறையை குறிக்கிறது, அதாவது சமையலறையில் சாப்பாடு தயாராவது போல செய்தியறைகளில் செய்து உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் செய்தியறைகளில் பன்மைத்தன்மையை பேணுவதற்காக ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி '"நாம் செயலாற்றும் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் செய்தியறைகளில் வாய்ப்பளிப்பதே சமூக பொறுப்புள்ள ஊடகங்களின் கடமை" என்றது. 1975 - ல் அமெரிக்க ஊடகங்களில் கருப்பர்கள் மற்றும் சிறுபான்மையினர் 3.95% மட்டுமே இருப்பதை 'அமெரிக்க ஊடக செய்தி ஆசிரியர்கள் சங்கம்' கண்டது. இதைத்தொடர்ந்து 1978 -ல் நடந்த இந்த சங்கத்தின் வருடக்கூட்டத்தில் ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது அதற்கு 'இலக்கு - 2000' என்று பெயரிட்டனர். இலக்கு என்னவென்றால் 2000-ம் வருடத்தில் அமெரிக்க செய்திதாள்களில் மக்கள் தொகைகேற்ப அனைத்து சமூக குழுக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு பின்வரும் வழிமுறைகளை முன்மொழிந்தனர் 1. செய்திதாள்கள் வேலைக்கு ஆள் சேர்க்கும்போது பன்மைத்தன்மையை கடைபிடிக்கவேண்டும், 2. கறுப்பர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு இதழியல் கல்வி படிப்பதற்கான உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும், 3. சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பொருட்டு சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் 4. வருடந்தோறும் செய்தியறைகளில் இனக்குழுவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த கொள்கை முடிவை மொத்தம் உள்ள 1446 செய்தித்தாள் நிறுவனங்களில் 950 (66%) நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள் செய்தி பன்மைத்துவத்தை அடையும் நோக்கத்தில் சிறுபான்மையினரை பணிக்கமர்த்தினர். மேலும் இது போன்ற முடிவுகளுக்கு சமூகப்பொறுப்பு மட்டுமே காரணம் அல்ல அதையும் தாண்டி இனிவரும் காலங்களில் சந்தையில் தாக்குபிடிக்க வேண்டுமானால் செய்தியறைகளில் பன்மைத்தன்மையை கடைபிடிக்கவேண்டும் என்ற நிலை அங்கு உருவாகியது. (சிட்டி ஆப் காட் திரைப்படத்தில் கறுப்பர் இனத்தை சேர்ந்த கதாநாயகனுக்கு இதுவரை கிடைக்காத புகைப்படங்களை எடுத்தமைக்காக ஒரு பத்திரிக்கையில் புகைப்படக்காரராக வேலை கிடைப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்).
இந்த அமெரிக்க உதாரணம் இந்திய ஊடகங்களில் தலித்துகள் மிகவும் குறைவாக இருப்பதற்கு சரியான தீர்வாக இருக்கும். ஆனால் பிற தனியார் வணிக நிறுவனங்கள் கேள்வி எழுப்பவது போல ஊடக நிறுவனங்களும் 'திறமை' 'தகுதி' குறித்து கேள்விகள் எழுப்பலாம். ஆனால் ஊடக நிறுவனங்கள் தலித்துகள் ஊடக வேலையை விரும்புவது இல்லை அல்லது இந்த 'சவாலான' வேலைக்கேற்ற திறமையானவர்கள் அங்கு இல்லை என்ற காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்க முடியாது. ஊடகங்கள் தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அனைவருக்கும் செய்தியறைகளில் வாய்ப்பளிக்கும் சமூகப்பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையர் திரு.புனியா தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும்போது "தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களான வங்கி மற்றும் அரசு சலுகைகளை சார்ந்தே செயல்படுகின்றன. ஆகவே இடஒதுக்கீட்டிலிருந்து இவை விலக முடியாது" என்கிறார்.
வெவ்வேறு சமூக குழுக்களிலிருந்து பத்திரிக்கையாளர்களை அடையாளம் காண்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் பத்திரிகைத்துறையில் இதுவரை வாய்ப்பளிக்கப்படாத குழுக்களுக்கு பத்திரிக்கையாளர் பயிற்சியளிப்பது கடினமான ஒன்றல்ல. இதை ஒவ்வொரு ஊடக நிறுவனமும் செயல்படுத்த முன்வரவேண்டும். அதாவது இந்திய ஊடகங்களில் பன்மைத்தன்மையை செயல்படுத்த தலித்துகளை உட்கொணர உதவித்தொகையுடன் கூடிய பத்திரிக்கையாளர் பயிற்சியை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை ஊடக நிறுவனங்கள் வேலைக்கமர்த்தி தங்களின் சமூகப்பொறுப்பை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். சென்னையில் செயல்பட்டுவரும் 'ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' இதற்கு ஒரு உதாரணமாக கொள்ளலாம்.

ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்

இந்த கல்லூரி மீடியா டெவலப்மென்ட் பவுண்டேசனால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஒரு வருட டிப்ளமோ இதழியல் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொலைக்காட்சி, அச்சு ஊடகம், வானொலி, மற்றும் இணைய ஊடகம் ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டணம் மூன்று லட்சம் ரூபாய் வரை இருப்பதால் சாதாரணமானவர்கள் அணுக முடியாது என்பது உண்மை. ஆனால் இங்கு பயிற்சி பெரும் மாணவர்கள் இந்திய அளவில் ஆங்கில ஊடகங்களில் வேலைவாய்ப்பு  பெறுகின்றனர். கடந்த 2005 -ம் ஆண்டு இந்த கல்லூரி வருடந்தோறும் நான்கு தலித் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாகப் பட்டு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே தனியார் இதழியல் கல்லூரிகளில் தலித்துகளுக்கான பெல்லோஷிப் வழங்கும் முதல் கல்லூரி இதுவே என்பது முக்கியம். இந்த பெல்லோஷிப் அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடத்தில் (2005) மூன்று தலித் மாணவர்கள் பயிற்சி பெற்று ஊடகங்களில் வேலைக்கமர்ந்தனர். ஆனால் அதற்கு அடுத்த வருடம்  போதிய விண்ணப்பங்கள் தலித் மாணவர்களிடமிருந்து பெறப்படாததால் இதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்தப் பிரச்னை கடந்த 2010 வரை நீடித்தது. கடந்த மார்ச் 2010 அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டபோது தலித் மாணவர்களிடமிருந்து குறைவான விண்ணப்பங்களே வந்தன. இந்த முறை ACJ -ல் படித்த பழைய மாணவர்கள் மற்றும் தலித் ஆர்வலர்கள் இந்த பெல்லோஷிப் விஷயத்தை எஸ்.எம்.எஸ், இ.மெயில் மூலமாக தகவல்களை பரப்பினர். இதன் பயனாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எழுத்து தேர்வு முடிவில் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், தேர்வு எழுதிய பெரும்பாலோர் தமிழ்வழிக் கல்வி கற்றவர் என்பதால் ஆங்கில மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. இந்த தகவல் பரப்பலில் பங்கெடுத்தவர்கள் கண்டுணர்ந்த விஷயம் என்னவென்றால் அடுத்த முறை அனுமதி தேர்வுக்கு முன்பே தலித் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இறுதியாக 

ஊடகங்களில் தலித்துகளுக்கான இடத்தை கோருவது என்பது மற்றுமொரு இடஒதுக்கீட்டுக் கோரிக்கையல்ல. ஒரு நாட்டின் கருத்தைச் சொல்லும் ஊடகங்களில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கருத்து ஒரு சார்புடையதாக, குறைவுடையதாகிவிடும். ஊடகங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக பன்மைத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். தலித்துகளுக்கு ஊடகங்களில் இடம் வழங்குவது என்பது அறம் மற்றும் வியாபாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் தவிர்க்க முடியாததாகிறது. ஓன்று, சமூக பொறுப்பு எனும் அறம் அனைத்து ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும், அதாவது இருபது சதவீதம் எண்ணிக்கை கொண்ட மக்கள் நாட்டின் பொதுக்கருத்தை பிரதிபலிப்பதில் பங்கு கொள்ள வேண்டும்.  இரண்டாவது, வியாபார ரீதியில் பார்த்தால் தலித் வாசக சந்தையை சென்றடைய வேண்டுமென்றால் அவர்களுக்கான செய்தி அதில் இடம் பெற வேண்டும், இல்லையென்றால் அந்த மக்கள் இந்த ஊடகங்களை புறக்கணிக்கலாம்.

ஜெ. பாலசுப்பிரமணியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இந்த கட்டுரை எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியில் (12.03.2011) வெளியானதின் தமிழ் வடிவம்.